Thursday, August 13, 2009

Rajini 60

அபூர்வம் என்றால் ரஜினி. மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர் மேன். 60 வயது அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள் இதோ..!

'எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது' விவேகானந்தரின் இந்தப் பொன்மொழிதான் ரஜினி வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது!

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு அடுத்ததாக இப்போதும் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது நம்ம சூப்பர் ஸ்டார்தான்!

தமிழ்ப் படங்கள் ரஷ்ய மொழியில் டப் ஆகின்றன. முதல் படம் 'சந்திரமுகி'!

ரஜினி முன்பு தன் கையில் அணிந்திருந்த காப்பு, இப்போது நெல்லையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் திருமாறன் என்பவரிடம் இருக்கிறது!

25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்குத் தன் கையெழுத்துப் போட்ட சர்ட்டிஃபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்!

'தளபதி' காலத்தில் வலது கணுக்காலில் கறுப்புக் கயிறு கட்டியிருப்பார் ரஜினி. பிறகு, இடது கை கட்டை விரலில் தங்க வளையம். இப்போது, ருத்ராட்ச மோதிரம், ரஜினி ஸ்பெஷல்!

'செக்ஸ் என்பது பரமசுகம், ஆனந்தம். வெறுத்து ஒதுக்குற அளவுக்கு இது விஷம் இல்லை. சோஷியல் சர்வீஸ் பண்றவங்களுக்கு இது இடைஞ்சல், அவ்வளவுதான். பெண் இல்லாமல் தூங்கவே முடியாதுன்னு ஒரு நிலைமை இருந்தது. இப்போ அது குறைஞ்சிருக்கு. எதிர்காலத்தில் எப்படி மாறுமோ?'

-1981ம் வருடம் 'சாவி'க்கு ரஜினி கொடுத்த பேட்டியின் சில வரிகள் இவை.

இப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்!

மத்திய அரசு இந்திய சினிமாவைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரிக்கிறது. தமிழில் ரஜினி, கமல் இருவரையும் தேர்ந்தெடுத்து அவரவர் பற்றிக் கருத்துக் கேட்டது. கமல் சொல்லிவிட்டார். ரஜினி மறுத்துவிட்டார். 'என்னைப்பற்றி நான் சொல்ல முடியாது. என் ரசிகர்களிடம்தான் கேட்க வேண்டும்' என்று சொன்னதால், ரஜினி ரசிகர்கள் சிலர் அந்த ஆவணப் படத்தில் பேசியிருக்கிறார்கள்!

ரஜினி ஃப்ரீயாக இருந்தால், அடையாளத்தை மறைக்கும் அளவுக்குச் சின்னதாக கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார். சமீபத்தில் அப்படிப் போய் வந்த இடம்... திருப்பதி!

மாப்பிள்ளையான பிறகு, தனுஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் பரிசளிப்பது ரஜினியின் வழக்கம்!

திரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்!

தனுஷ், தன் மாமனார் ரஜினியை இப்போதும் 'சார்' என்றுதான் அழைக்கிறார். ரஜினியும் தனுஷை 'தனுஷ்' என்றே அழைக்கிறார்!

'முள்ளும் மலரும்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தை இப்போதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ரஜினி!

'எந்திரன்' படத்தில் ஒரே பாடலில் 100 விதமான ஸ்டைல்களில் தோன்றுகிறார் ரஜினி. ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒவ்வொரு உடை என இந்த ஒரு பாடலில் மட்டும் மொத்தம் 100 விதமான உடைகளில் வருகிறார். ரஜினியின் விருப்பத்தின் பேரில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைத்து இருப்பவர் பிரபுதேவா!

ஆன்மிகம் தவிர, உலகத் தலைவர் களின் வரலாறு தொடர்பான புத்தகங் களில் ரஜினிக்கு எக்கச்சக்க ஆர்வம்!

கறுப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார். இப்போது ஓய்வு நேரங்களில் காவி, கறுப்பு, நீலம் என கலர் வேட்டிகள் அணிகிறார்!

ரஜினி நடித்த ஒரே ஆங்கிலப் படமான Blood stone-ல் ரஜினி பேசும் முதல் டயலாக், 'Your Problem is bloodstone whereas my problem is stomach'

ரஜினியின் ஆன்மிகம் பற்றிய விமர்சனங்கள் வந்தபோது அவர் சொன்னது, 'நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை!'

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சியார்குப்பம்தான் ரஜினியின் பெற்றோரின் பூர்வீக ஊர். அங்கு இப்போது ரஜினியின் பெற்றோர் நினைவாக மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை நாச்சியார் குப்பத்துக்கு அடிக்கடி சென்று பார்வையிடுபவர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்!

ரஜினிக்கு மட்டன் பிடிக்கும். குறிப்பாக தலைக்கறி!

'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு!

ரஜினிக்குப் பழக்கமான வாடகை கார் டிரைவர் இருக்கிறார். இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன் செய்து வரச் சொல்லி, எங்காவது கையேந்தி பவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்!

ஒரு படத்தின் சூட்டிங் முடியும்போது அந்தப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு ஒரு தொகையைப் பரிசாகத் தருவது ரஜினியின் பழக்கம். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய்!

ரஜினிக்குத் தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு!

ரஜினியின் 'பில்லா' ரீ-மேக்கைத் தொடர்ந்து 'அன்புக்கு நான் அடிமை ரீ-மேக் ஆகிறது. விரைவில் அறிவிப்பு வரும்!

மார்ல்பரோ சிகரெட்டை விரும்பிப் புகைக்கும் ரஜினி, இப்போது வில்சுக்கு மாறிவிட்டார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் இப்போது டென்ஷன் பொழுதுகளைத் தவிர மற்ற நேரங்களில் புகைப்பது இல்லை!

ரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு!

பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது ரஜினியின் சென்டிமென்ட். அவர் வரத் தாமதமானால், 'இன்னும் வரலையா?' என்று போன் செய்துவிடுவார்!

இமயமலை மட்டும் இல்லாமல், எந்த ஆன்மிக ஸ்பாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சம் வாங்கி வந்து சேர்த்துவைப்பது ரஜினியின் பழக்கம். இப்படிச் சேர்த்த ருத்ராட்சங்கள் வீட்டில் எக்கச்சக்கமாகக் குவிந்துகிடக்கின்றன!

ரஜினி வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது அறையில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தொலைபேசிக்கு இன்னொரு இணைப்பு உண்டு. ரஜினி மண்டபத்தில் இருக்கும்போது ரசிகர்கள் யாராவது போன் பண்ணினால், அந்த இன்னொரு இணைப்பு வழியாக எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த ரசிகருடன் பேச வேண்டும் என்று விரும்பினால் அவரே லைனில் வருவார்!

ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். குஷி மூடில் இருந்தால் அப்போதைய ஹிட் பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு பாடல் மனதுக்குப் பிடித்துவிட்டால், சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர், பாடகருக்கு சர்ப்ரைஸாகப் போன் போட்டுப் பாராட்டுவது ரஜினி ஸ்டைல்!

50 கோடி ரூபாய் செலவில் ரஜினி, திருவள்ளுவராக நடிக்கும் படத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. என்ன காரணமோ தெரியவில்லை, அது அப்படியே டிராப் ஆகிவிட்டது!

ரஜினியின் போயஸ் தோட்டத்து வீட்டின் பெயர் 'பிருந்தாவன்'. இது ரஜினியே ஆசையாக வைத்த பெயர்!

ரஜினியின் அனைத்துச் சந்திப்புகளையும் சுப்பையா என்பவர்தான் நிர்வகிக்கிறார். ரஜினியின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர் இவர்தான்!

பழமொழிகள், குட்டிக் கதைகள், பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப் பல நூறு புத்தகங்களை வாங்கிவைத்திருக்கிறார். அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்!

அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது ரஜினியின் பழக்கம். வாசலில் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு நின்றபடி மலர்ந்து சிரிப்பார்!

தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வருபவர்களுடன் குழந்தைகள் இருந்தால், குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு போஸ் கொடுப்பதுதான் ரஜினியின் பழக்கம்!

யார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

'தலைவா, உங்க பிறந்த நாளன்று உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்' என்று ரசிகர் ஒருவர் சொன்னதற்கு, ''பிறந்த நாளன்று 'நான் ஏன் பிறந்தேன்?' என்று சிந்திக்க எனக்கு அவகாசம் தேவை. அன்றைய நாளில் என் ஃபேமிலி மெம்பர்ஸ்கூட என்னைத் தனியாக விட்டுவிடுவார்கள். அன்னிக்கு வேண்டாமே ப்ளீஸ்!'' என்று பிறந்த நாள் பற்றிய வித்தியாசமான கோணம் ஒன்றைக் கொடுத்தார் ரஜினி!

ரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்!

ரஜினி சூ போடுவதை விரும்புவது இல்லை. சூட்டிங்கின்போதுகூட அவசியப்பட்டால் மட்டுமே சூ அணிவார். மற்றபடி எப்போதும் செருப்பு அணிவதுதான் தலைவரின் சாய்ஸ்!

விமானப் பயணத்தைவிட ரயில் பயணம்தான் ரஜினிக்குப் பிடித்தமானது. 'படையப்பா' வரையிலும் ரயிலில்தான் போய்க்கொண்டு இருந்தார்!

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிட்டார். அந்த வட்டிப் பணத்தில்தான் அந்தக் குடும்பங்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்!

ராகவேந்திரா மண்டபத்தில் வெயில் காலத்தில் மக்களுக்கு இலவசமாக மோரும், ஐஸ் வாட்டரும் வழங்குவார்கள். இதைத் தன் அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார் ரஜினி!

எந்தக் காரணத்தைக் கொண்டும் கேரவனில் ஓய்வெடுக்க மாட்டார். காலையில் வந்தவர், மாலை சூட்டிங் முடியும் வரைக்கும் செட்டுக்கு உள்ளேதான் இருப்பார். மதிய இடைவேளையில் அங்கேயே துண்டை விரித்துப்போட்டு சற்றுக் கண்ணயர்வார்!

டான் - பில்லா, தீவார் - தீ, மர்த் - மாவீரன், திரிசூல் - மிஸ்டர் பாரத், குத்தார் - படிக்காதவன் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் 10 தமிழ் ரீ-மேக் படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்!

பாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி!

பெங்களூர் ஃப்ளாட்டில் ரஜினி தனியாகவே இருப்பார். புத்தகங்கள், டி.வி.டி-க்கள் என ரஜினியின் தனிமை தவம் பெரும்பாலும் இங்கேதான்!

ரஜினியின் போயஸ் வீட்டுக்கு அருகே ஒரு காலி மனை கிடந்தது. ஐஸ்வர்யா திருமண வரவேற்பு அங்குதான் நடந்தது. இப்போது அந்த இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டப்பட்டு இருக்கிறது. விருந்தினர்களை அங்குதான் சந்திக்கிறார்!

யாரிடம் பேசினாலும் யாரையும் குறை சொல்லிப் பேசவே மாட்டார். சமீப காலங்களில் இதை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்!

கேளம்பாக்க வீட்டுக்கு ரஜினியைப் பார்க்க யார் சென்றாலும், அவர் அங்கு இருந்தாலும், இல்லை என்றாலும் முதலில் இளநீர் வந்துவிடும்!

'ஃபைன், குட்' இவைதான் ரஜினியின் உதடுகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!

முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார். நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்குக்கூடப் போகவில்லை. 'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில் இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம். பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்!

ரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிறந்த நாளுக்குப் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தும் திட்டம் ரஜினிக்கு இருக்கிறது. இதற்கான ஆஃப் த ரெக்கார்ட் அழைப்புகள் சென்றுவிட்டன!

சிகரெட் சர்ச்சைகளுக்காக அன்புமணி ரஜினியிடம் பேசியபோது பேச்சு நீண்டு ஜாலியாக, 'புரவிப்பாளையம் என்ற ஊரில் சாமியார் ஒருவரின் சமாதி இருக்கிறது. அங்கு அவசியம் ஒருமுறை போய் வாருங்கள்' என அன்புமணிக்கு ஆலோசனை சொன்னாராம் ரஜினி!

'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்!

சினிமா நகைச்சுவையில் ரஜினிக்கு இஷ்டமானவர் வடிவேலு. அவ்வப்போது அவருடன் பேசிச் சிரிப்பார். 'உங்ககிட்ட பேசினா, எனக்குப் புதுசா ரீ-சார்ஜ் பண்ணின மாதிரி இருக்கு வேலு' என்பார்!